நாட்டில் அனைத்து பிரிவினரும் வங்கி சேவையை பயன்படுத்தும் நோக்கில் ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் சேமிக்கப்பட்ட தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிதியமைச்சகத்திடம் செய்தியாளர் ஒருவர் கோரி இருந்தார்.
எனவே அது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த மாதம் 14-ந் தேதி வரை 28.9 கோடி வங்கி கணக்குகள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகளில் 23.27 கோடி, மண்டல ஊரக வங்கிகளில் 4.7 கோடி மற்றும் தனியார் வங்கிகளில் 92.7 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த கணக்குகளில் ஜூன் 14-ந் தேதி வரை மொத்தம் ரூ.64,564 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 7 மாதங்களில் ரூ.311.93 கோடி செலுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.