செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

மத்திய அரசு சமீபத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்தியது. பல்வேறு மாநிலங்களும் தங்களது சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி வருகின்றன. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டசபை கூடியது. சபாநாயகர் கவிந்தர் குப்தா ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர், ஜி.எஸ்.டி வரியால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என வாதம் செய்தனர். ஜி.எஸ்.டி மசோதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு அஞ்சாமல், சபாநாயகர் கவிந்தர் குப்தா சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தேசிய மாநாட்டு கட்சி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் தீர்மானத்தை ஆதரித்தனர். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.