செய்திகள்

போராட்டங்களின் போது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் 5 ஆண்டு சிறை: காஷ்மீரில் அவசர சட்டம் அமல்

போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காஷ்மீர் பொதுச்சொத்து அவசர சட்டம் 2017-ஐ கவர்னர் என்.என்வோரா நேற்று பிறப்பித்தார்

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக அடிக்கடி போராட்டம், முழு அடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளின் போது கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் விளைகின்றன.

இந்த சேதங்களை தவிர்க்கும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தி உள்ளது. அதன்படி ‘காஷ்மீர் பொதுச்சொத்து (சேதம் தவிர்ப்பு) (திருத்தம்) அவசர சட்டம் 2017’-ஐ கவர்னர் என்.என்.வோரா நேற்று பிறப்பித்தார்.

இந்த அவசர சட்டத்தின் படி, மேற்படி போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் சேதம் ஏற்பட்ட பொருட்களின் சந்தை மதிப்புக்கு ஈடான தொகை அபராதமாகவும் வசூலிக்கப்படும்.

இதன் மூலம் போராட்டங்களின் போது தனிநபர் அல்லது அமைப்புகளால் தனியார் அல்லது பொது சொத்துகள் சேதமடைவதை தீவிரமாக தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.