தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக அந்த மாநில சட்டமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டங்களை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.