துஷன்பே:
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளை எடுப்பதில் பிராந்திய நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் துருக்கியில் ‘‘ஆசியாவின் இதயம்’’ என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே முதல் மாநாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான ஆசியாவின் இதயம் மாநாடு தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று துஷன்பே சென்றார். இந்த மாநாட்டில் 50 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
எனவே மாநாட்டின் இடையே ஜெய்சங்கர் மற்றும் ஷா மஹ்மூத் குரேஷி இடையிலான சந்திப்பு நடைபெறலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும் அப்படி ஒரு சந்திப்புக்கு திட்டமிடவில்லை என ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.