மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால் ரெட்டியின் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
உடல் நலக்குறையால் இன்று அதிகாலை மரணமடைந்த மத்திய முன்னாள் மந்திரி ஜெய்பால் ரெட்டி(77) மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெய்பால் ரெட்டியின் உடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ், ஜெய்பால் ரெட்டியின் உடலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
பின்னர், பகல் ஒரு மணியளவில் இறுதிச்சடங்குகள் தொடங்கி ஒன்றரை மணியளவில் ஹுசைன் நகர் அருகேயுள்ள இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.