கோவை:
கோவை காந்திபுரம் ஜெயில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி பிருந்தா (29). இவர் கோவை பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிருந்தாவின் தாய் உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். அவரை பிருந்தாவால் கவனிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளை மாமனார்-மாமியாரும் பார்த்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் தாயை கவனிக்க முடியாத மன வேதனையில் இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்த பிருந்தா 9 மணியளவில் பினாயில் குடித்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
கோவை தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
அங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சிராஜூல் கார்க் அவரது மனைவி மரினா காட் (22) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது.
கடந்த 13-ந் தேதி மரினா காட் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும்போது தீ சரியாக எரியாததால் டீசலை ஊற்றினார். அப்போது மரினா காட் மீது தீ பற்றியது. இதில் அவரது கை, தொடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மரினா காட் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 4 மாதத்தில் இளம்பெண் தீயில் கருகி பலியானதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.