செங்குன்றம்:
புழல் சிறையில் வார்டராக பணியாற்றி வருபவர் லிவிங்ஸ்டன் பிரபு (வயது 22). இவர், சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளார். இவரது சொந்த ஊர் நெல்லை ஆகும்.
இவர், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட லிவிங்ஸ்டன் பிரபு, வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று முன்தினம் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்தார். மேலும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளையும் தின்று மயங்கி விழுந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த, அருகில் இருப்பவர்கள் லிவிங்ஸ்டன் பிரபுவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PuzhalJail