சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல்சிற்பம் 
செய்திகள்

ஜெகநாதர் ரத யாத்திரை- பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

ஜெகநாதர் ரத யாத்திரையை முன்னிட்டு, பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் தனது கைவண்ணத்தில் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.

பூரி:

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி தேரோட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச மணல்சிற்பக் கலைஞரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக் தனது கைவண்ணத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். 

ஜெகநாதர் (பகவான் விஷ்ணு), அவரின் சகோதரர் பாலபத்ரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகிய சிற்பங்களுடன், அவர்கள் எழுந்தருள உள்ள தேர்களின் மாதிரியையும் சுதர்சன் பட்நாயக் மணல்சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். இந்த சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜெய் ஜெகந்நாத்! ரதயாத்திரை நடைபெறும் புனித நாளான இன்று பகவான் ஜெகநாதர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க மகாபிரபு (ஜெகநாதர்) ஆசீர்வதிப்பார்’ என்று கூறி உள்ளார். 

SCROLL FOR NEXT