செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி பண மோசடி வழக்கு: ரூ.148 கோடி மதிப்பு சொத்துக்களை கையகப்படுத்தியது அமலாக்கத்துறை

ஜெகன் மோகன் ரெட்டி மீதான பண மோசடி வழக்கில் தொடர்புடைய ரூ.148 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ஐதராபாத்:

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, பண மோசடி மற்றும் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி மற்றும் நிம்மகடா பிரசாத் ஆகியோருக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை கையகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் தொடர்புடைய நிம்மகடா பிரசாத்தின் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.148.89 கோடி மதிப்பிலான நிலங்களை அமலாக்கத்துறை தற்போது கையகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.