இஸ்லாமாபாத்:
தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாதவை அவரது குடும்பத்தினர் இன்று சந்தித்தனர். இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து குல்பூஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவியும் சந்தி்த்தனர். இந்த சந்திப்பின் காரணமாக இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குல்பூஷன் ஜாதவ் கூறியுள்ளார். அரசுக்கு குல்பூஷன் ஜாதவ் நன்றி தெரிவிக்கும் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. முன்னதாக குல்பூஷன் ஜாதவுக்கு தூதக ரீதியிலான உதவிகளை வழங்கவும் அவரை சந்திக்கவும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. சர்வதேச நீதிமன்றத்திடம் இந்தியா முறையிட்டதன் காரணமாக தற்போது இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் பணிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.