செய்திகள்

ஜோயாலூக்காஸ் நகைக்கடை குழுமத்துக்கு சொந்தமான 130 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை

கேரள மாநிலத்தை தலைமை இடமாக கொண்ட ஜோயாலூக்காஸ் நகைக்கடை குழுமத்துக்கு சொந்தமான 130 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கேரள மாநிலத்தை தலைமை இடமாக கொண்ட ஜோயாலூக்காஸ் நகைக்கடை குழுமம் ரொக்கமாக ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளது. இதுதவிர, தங்கம், வைர நகைகளின் விற்பனையும் பன்மடங்கு அதிகரித்தது. இந்த பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.

இதையடுத்து, ஜோயாலூக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை, ஐதராபாத், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கேரள மாநிலத்தின் திரிச்சூர் மற்றும் பிறபகுதிகளில் உள்ள ஷோரூம்களிலும், அந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மற்றும் சிலரது வீடுகள் என மொத்தம் 130 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளுக்காக நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.