2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்த தனி நபர்களின் எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 2 கோடியே 22 லட்சமாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு, தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 82 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 2 கோடியே 26 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 24.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து எடுத்த நடவடிக்கை, தூய்மை பண திட்டம் ஆகியவற்றின் காரணமாகத்தான் தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.