செய்திகள்

இஸ்தான்புல் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse

இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஐந்து வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Istanbulbuildingcollapse

SCROLL FOR NEXT