இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு 
செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய வருகை திடீர் ரத்து

செப்டம்பர் 9-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

ஜெருசலேம்:

சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற நம் நாட்டின் முதல் பிரதமர் என்ற முறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றபோது டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வந்து அவரை வரவேற்றார். 

அப்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அந்நாட்டின் ஓல்கா கடற்கரையில் நடந்தவாறு ஆலோசனை நடத்திய காட்சிகள் முன்னர் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் வெகுவாக ஆக்கிரமித்திருந்தன. அதன்பின், பெஞ்சமின் நேதன்யாகு 2018-ம் ஆண்டில் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார். 

இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக (3+9=12 ஆண்டுகள்) பதவி வகித்த முதல் பிரதமர் என்ற சாதனையை ஏற்படுத்திய பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

தேர்தல் காரணமாக தனது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்ட விவரத்தை பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் இருவருக்கும் வசதியான தேதியில் மறு சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என இஸ்ரேல் பிரதம்ர் அலுவலகம் வெளியிட்டுள்ள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.