செய்திகள்

ஆப்கானிஸ்தான்: டி.வி நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் டி.வி நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காபுல்:

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் டி.வி நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பர்ஷோத் மொழி டி.வி நிலையம் உள்ளது. இன்று காலை இங்கு ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காவலர் ஒருவரும், அலுவலக ஊழியர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த மற்ற பணியாளர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள மாடிகளுக்கு ஓடினர். தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர், அலுவலகத்தின் ஒருபக்க சுவரை உடைத்து தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை நடத்தினர்.

இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக டி.வி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.