செய்திகள்

இந்திய சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் - விசாரணை கமிஷன் அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு

பாகிஸ்தானில் இரு இந்திய சிறுமிகளை கடத்தி, மதம்மாற்றி, கட்டாய திருமணம் செய்ததாக வெளியான தகவல் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை கமிஷனை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நியமித்துள்ளது. #IslamabadHC

மாலை மலர்

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோக்டி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.

பின்னர்,  ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு சிறுமிகளும் பாதுகாப்பு கேட்டு தங்கள் கணவர்களுடன் நீதிமன்றத்தை நாடினர். தங்களை யாரும் பலவந்தப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை.

எனினும், அவர்கள் இருவரும் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக அந்த சிறுமிகள் பெற்றோரின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். சிந்து மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட விசாரணை கமிஷனை அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அதார் மின்னாலா இன்று உத்தரவிட்டார்.