செய்திகள்

என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா? - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா? என கேள்வி எழுப்பி உள்ள டிடிவி தினகரன், வருமான வரி சோதனையை தான் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.

தமிழகம் முழுவதும் சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதை எதிர்க்கவில்லை, வரவேற்கிறேன். ஆனால், ஒரே சமயத்தில் 1800 பேரைக் கொண்டு சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? வருமான வரித்துறை சோதனைக்கு பயன்படுத்திய வாகனங்கள் ஒரே நிறுனத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், சேகர் ரெட்டியின் நண்பர்கள், அவரது டைரியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நான் காந்தியின் பேரன் போல பேசவில்லை. நானும் சாதாரண மனிதன் தான். அதேசமயம், எங்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா? நான் தூய்மையானவன் என்று என்னால் கூற முடியும். ஆனால் என் உறவினர்கள் குறித்து என்னால் கூற இயலாது.

அரசியல்வாதிகள் என்றால்  கோவணத்துடன்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா?  வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கம் எடுத்தாலே அது கருப்பு பணம் என்று கூறமுடியாது. புதுச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் பாதாள அறைகள் எதுவும் இல்லை.

இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.