கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்திற்கு எதிராக போராடியவர் இரோம் சர்மிளா. அதன் பிறகு தனது போராட்டத்தை கை விட்டு கடந்த வருடம் நடந்த அம்மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து கடந்த 2 மாதமாக கொடைக்கானலில் தங்கியுள்ளார்.
அவருடன் லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த்கொட்டின் கோவும் தங்கியுள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இரோம் சர்மிளா போராளியாக இருப்பதால் கொடைக்கானல் நகரம் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் மகேந்திரன் என்பவர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவர் தனது ஆட்சேபனை மனுவில் கொடைக்கானல் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பேன் எனவும் பேட்டியளித்திருப்பதால் கொடைக்கானலில் அவரது திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். இதனிடையே இரோம் சர்மிளா தற்போது தமிழக அரசுக்கு எதிராக இணையதளத்தில் தனது வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியை தமிழக அரசு கைது செய்திருப்பது வெட்கக்கேடானது. இப்பிரச்சனையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்காக குரல் கொடுப்போம் என பேசியுள்ளார். இரோம் சர்மிளாவின் இந்த இணையதள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.