செய்திகள்

இருடியம் விற்றுத்தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: தொழில் அதிபர் கைது

அம்பத்தூரில் இருடியம் விற்றுத்தருவதாக ரூ.8 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

அம்பத்தூர்:

திருவண்ணாமலை அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயி. இவர்தன்னிடம் அதிக அளவு செப்பு பாத்திரங்கள் இருப்பதாகவும் அதனை விற்றுத் தரும்படியும் நண்பர் ஒருவரிடம் கூறினார்.

அவர் மூலம் அம்பத்தூர், ஒரகடத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராம்ராஜ் பாண்டே அறிமுகம் ஆனார். அப்போது பாலசுப்பிரமணியனிடம், “உங்களிடம் இருக்கும் செப்பு பாத்திரங்களில் இருடியம் உள்ளது.

இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும். இதனை விற்றுக் கொடுக்க ரூ.8 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனை நம்பிய பாலசுப்பிரமணியன் ரூ.8 லட்சத்தை ராமராஜ் பாண்டேயிடம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி இருடியம் விற்று கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்துவிட்டார்.

இது பற்றி பாலசுப்பிரமணியன் கேட்ட போது அவருக்கு ராம்ராஜ் பாண்டே மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து பாலசுப்பிரமணியன் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜய ராகன் வழக்குபதிவு செய்து ராம்ராஜ் பாண்டேவை கைது செய்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சி.பி.ஐ. அதிகாரிகள் போல் வந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த தன்னையும், குடும்பத்தினரையும் கட்டிப்போட்டு ரூ.4 லட்சம், 15 பவுன் நகையை எடுத்து சென்ற விட்டதாக ராம்ராஜ் பாண்டே போலீசில் பொய் புகார் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.