அயர்லாந்து பிரதமர் கோவா வருகை 
செய்திகள்

புத்தாண்டை கொண்டாட, அயர்லாந்து பிரதமர் கோவா வருகை

புத்தாண்டை கொண்டாடுவதற்காக, அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் கோவாவுக்கு வருகை தந்துள்ளார்.

பனாஜி:

அயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வராத்கர், தன் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாட முடிவு செய்து இருக்கும் அவர், வட கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் குடும்பத்தோடு தங்கி உள்ளார்.

அவருடைய தந்தை அசோக் வராத்கர் ஒரு டாக்டர், இந்தியாவை சேர்ந்தவர். மராட்டியத்தின் கடலோர மாவட்டமான சிந்துதுர்கில் உள்ள வராத் என்ற கிராமமே அவரது சொந்த ஊர் ஆகும். 1960-ம் ஆண்டு அவர் இங்கிலாந்து சென்று குடியேறிவிட்டார்.

லியோ வராத்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அவரது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார். இதுவரை 5 முறை இந்தியா வந்ததாகவும், ஆனால் சொந்த ஊருக்கு வருவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார். 3 தலைமுறையை சேர்ந்த குடும்பத்தாரை சந்தித்தது சிறப்பான தருணம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

ஜனவரி 1-ந் தேதி குடும்பத்தோடு புத்தாண்டை கோவாவில் கொண்டாடும் அவர், அன்று மதியம் விமானத்தில் நாடு திரும்புகிறார்.

SCROLL FOR NEXT