செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Karti #AircelMaxiscase

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஏப்ரல் 16ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை, வரும் 27-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Karti #AircelMaxiscase

SCROLL FOR NEXT