புதுடெல்லி:
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்தது. இதை சர்வதேச பிரச்சினையாக்க அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பழிவாங்கும் விதமாக மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகள் விரைவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
வருகிற குளிர்காலத்தில் இந்த தாக்குதலை மிகப் பெரிய அளவில் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது.
நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மூலம் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்ட மிட்டு உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் காமாண்டர் அபுஉஜைன் இந்தியா மீது விரைவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியதாகவும் உளவுத்துறை அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்த சதிதிட்டம் தொடர்பாக உளவுத்துறை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பாக முக்கிய அமைப்புகளுடன் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.