செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா பங்கேற்க அனுமதி- விசாரணை ஆணையம் உத்தரவு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா பங்கேற்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #Jayalalithaa #ApolloHospital

மாலை மலர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ராஜன் ஹெக்டே மற்றும் நர்சு ஜோஸ்னமோல் ஜோசப் ஆகியோர் இன்று ஆஜரானார்கள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி செய்தவர்கள்.

அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு இருவரும் பதில் அளித்தனர். இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வின்போது தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடந்தது.

அப்போது ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் ஆய்வில் பங்கேற்பதற்கு ஆணையம் மற்றும் அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து ஜெ.தீபா சார்பில் ஆஜராக வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

ஜெ.தீபாவின் உறுதி மொழியை ஏற்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா மற்றும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பங்கேற்க அனுமதியை நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்.