மும்பை:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய், மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 46 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஆர்த்தர் சாலை சிறையில் அடைபட்டுள்ள மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மீண்டும் சீரமைக்க முடியாத அளவுக்குஇந்த திருமண உறவு முறிவடைந்து விட்டதாகவும், இந்த உண்மை உங்களுக்கும் (பீட்டர்) தெரியும் என்பதால் வரும் 30-ம் தேதிக்குள் எனது கட்சிக்காரரான இந்திராணிக்கு உரிய பண நிவாரணத்தை தந்து விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பீட்டர் முகர்ஜிக்கு இந்திராணியின் வக்கீல் அனுப்பியுள்ள இந்த விவாகரத்து நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். #Indrani #divorce #PeterMukerjea