செய்திகள்

விமானத்தில் பறந்தபோது மாரடைப்பு - சென்னை பயணியை காப்பாற்றிய டாக்டர்

சென்னைக்கு வந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை இந்தூர் டாக்டர் காப்பாற்றிய சம்பவம் குறித்து அவரை சக பயணிகள், விமான ஊழியர்கள் பாராட்டினர். #Indoredoctor #AkhileshDubey

மாலை மலர்

இந்தூர்:

சென்னையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டு இருந்தார்.

விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அனந்த ராமனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இருக்கையிலேயே சுயநினைவின்றி மயங்கினார்.

இதை பார்த்த சக பயணிகள் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விமானத்தில் டாக்டர் யாராவது பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டனர்.

விமானத்தில் பயணம் செய்த இந்தூரைச் சேர்ந்த டாக்டர் துபே, அனந்தராமனுக்கு சிகிச்சை அளித்தார்.

அப்போது அவருக்கு நாடி துடிப்பு இல்லாமல் இருந்தது. மேலும் மூச்சும் விடவில்லை. உடனே அனந்தராமனுக்கு கார்டியோபுல் மோனரி மறு இயக்க சிகிச்சை அளித்தார். சுமார் 1½ மணி நேர சிகிச்சைக்கு பிறகு அனந்தராமனின் நாடி துடிப்பு, முச்சு விடுதல் சீரானது.

இதையடுத்து விமானம் தரை இறங்கியதும் அனந்த ராமன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பயணியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் துபேவை சக பயணிகள், விமான ஊழியர்கள் பாராட்டினர். #Indoredoctor #AkhileshDubey