செய்திகள்

17 கோடி டாலர் தேசிய அடையாள அட்டை ஊழல்: இந்தோனேசியா பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா

இந்தோனேசியாவில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பில் நடந்த 17 கோடி அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலை மலர்

ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டில் தேசிய மின்னியல் அடையாள அட்டை திட்டத்தின் மூலம் அரசுக்கு 170 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு வாரிய அதிகாரிகளால் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

ஊழல் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், பாராளுமன்ற சபாநாயகராக தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்குமாறும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர்  செட்யா நோவான்ட்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய ஊழல் பட்டியலில் 176 நாடுகளில் 90-வது நாடாக இந்தோனேசியா அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிக ஊழல் நிறைந்திருப்பதாக சர்வதேச ஊழல் தடுப்பு கண்காணிப்பு மையம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.