செய்திகள்

இந்தோனேசியா சுனாமி பலி எண்ணிக்கை 429 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை தாக்கிய சுனாமி பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiatsunami #tsunamideathtoll

இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில்  உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியானது. இதனால், அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.

சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
 
சுனாமி தாக்குதலில் 43 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், மீட்கப்பட்ட பிரேதங்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக உயர்ந்துள்ளது.

நேற்றிரவு நிலவரப்படி 429 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 1500 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முகமையை சேர்ந்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல்போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.