கோரக்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரம் இந்திய-நேபாள எல்லையோரம் உள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து சர்வதேச எல்லை வழியாக கோரக்பூருக்கு 5 பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
மேலும், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ரகசிய உளவாளிகள் சிலர், கடந்த மார்ச் மாதம் கோரக்பூர் மற்றும் சில நகரங்களுக்கு வந்ததாகவும், குறிப்பிட்ட சிலரை அவர்கள் சந்தித்து பேசியதாகவும் உளவு அமைப்புகள் கூறி உள்ளன.
இதையடுத்து எல்லையோரம் உள்ள காவல் நிலையங்கள், கோரக்பூரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கோரக்பூர் மாவட்டத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைவதற்கான வாய்ப்பு இருப்பதால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி எஸ்எஸ்பி அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, சுனாலி எல்லை அருகே காஷ்மீர் இளைஞர் என சந்தேகிக்கப்படும் ஒரு நபரை பிடித்து, உளவுத்துறை விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.