இண்டிகோ விமானம் (கோப்பு படம்) 
செய்திகள்

மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

மும்பையில் இருந்து பெங்களுரு நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், என்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் மும்பையிலேயே தரையிறக்கப்பட்டது.

மும்பை:

அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஏ320 ரக விமானத்தில் பயன்படுத்தப்படும் என்ஜினின் டர்பைன் (காற்றாடி) அமைப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். தற்போது உள்ள டர்பைன் அமைப்பால் விமான என்ஜின் கோளாறு, இறக்கைகளை செயல் இழக்க செய்தல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விமான விபத்து ஏற்படலாம்’ என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பெங்களுரு நோக்கி இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 நியோ ரக விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் என்ஜினில் திடீரென அதிர்வு ஏற்பட்டதால் எச்சரிக்கை கருவி ஒலித்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை மும்பை நிலையத்தில் தரையிறக்கினார். 

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே வாரத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவடு சம்பவம் இதுவாகும்.

கடந்த 2-ம் தேதி சென்னையில் இருந்து பெங்களுரு நோக்கி புறப்பட்ட ஏ 320 நியோ ரக விமானம் இதே காரணங்களுக்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

டர்பைன் கோளாறு காரணமாக எச்சரிக்கை கருவி ஒலித்து இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.