செய்திகள்

ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரிட்டன் எம்.பி.

பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரி பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. அந்நாட்டு பார்லி.,யில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.


லண்டன்:

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதி போராட்டம் நடத்தினர். அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து சுமார் 99 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அதில், 1919-ம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தனிநபர் மசோதாவிற்கு மேலும் 5 எம்.பி.,கள் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT