நகரி:
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்து அங்கு வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தார்.
இது அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய என்ஜினீயர்களுக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்திய மாணவர்களிடம் அமெரிக்காவில் உயர்கல்வி பயில ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் பலர் விசாவுக்கு விண்ணப்பித்தனர்.
இதில் பெரும்பாலானோருக்கு விசா கிடைக்காததால் எப்படியாவது அமெரிக்காவில் படிக்கும் எண்ணம் மேலோங்கி இருந்தது.
தற்போது டிரம்ப் அரசின் நடவடிக்கையால் அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் இந்திய மாணவர்களிடம் குறைந்து இருக்கிறது.
கடந்த 5 மாதத்தில் 116 பேர் மட்டுமே கல்வி பயில அமெரிக்கா சென்றுள்ளனர். 2015-16-ம் ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்கா செல்லும் மாணவர்களின் சதவீதம் 14.1 ஆக இருந்தது.
ஆனால் கடந்த 2016 மே மாதம் முதல் 2017 மே வரை 7 சதவீதமாக குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 582 பேர் படித்தனர். 2017-ம் ஆண்டு மே மாதம் வரை கூடுதலாக 116 பேர் சென்றுள்ளனர். இது 0.5 சதவீதம் ஆகும்.
இதன் மூலம் இந்திய மாணவர்களிடம் அமெரிக்க மோகம் அதிரடியாக குறைந்துள்ளதை கண்கூடாக காண முடிகிறது. இதனால் ஐரோப்பா நாடுகளில் கல்வி பயில மாணவர்களின் பார்வை திரும்பி உள்ளது.