டெல்லியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி செல்லும் ‘தக்ஷின்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அவர் ரெயிலில் பயணம் செய்தபோது மத்தியபிரதேச மாநிலம் பின்னா ரெயில் நிலையத்தில் சிலர் ஏறினர். முன்பதிவு செய்யாத அவர்கள் விஜயகுமார் இருந்த பெட்டியில் ஏறி அவரது இருக்கையை ஆக்கிரமித்து கொண்டனர்.
அவர்களிடம் விஜயகுமார் தனது இருக்கையை தரும்படி கேட்டும் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகர், ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கால் வலியால் அவதிப்பட்ட அவர் இரவு தூங்காமல் பயணம் செய்தார்.
இது குறித்து விஜயகுமார் டெல்லி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த டெல்லி நுகர்வோர் கோர்ட்டு விஜயகுமாருக்கு ரூ. 75 ஆயிரம் இழப்பீடு ரெயில்வே துறை வழங்க உத்தரவிட்டது.
இதில் 3-ல் ஒரு பங்கு தொகையை ரெயில் பரிசோதகர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டனர்.