1947-ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15-வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு கால பகுதிகளாக பிரிக்கலாம்.
1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
பம்பாயில் நடந்த முதல் காங்கிரஸ் கூட்டம்
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ.உ சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.
காந்தி 1915-ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். 1920-ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேருவின் மறைவுக்குப் பின் இந்திராகாந்தி லால் பகதூர் சாஸ்த்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாஸ்த்திரியின் திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் காமராஜரின் முயற்சியும் காரணமாகும். பின் 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார்.
காங்கிரஸ் கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரஸ் இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் என அறிவித்தது.
அதனால் எதிர் குழு ஸ்தாபன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970-ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமை புரட்சி நடந்தது. 1971-ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரமாக இருந்தார். 1974-ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.