செய்திகள்

இர்மா புயல் பாதிப்பு குறித்து அறிய உதவி தொலைபேசி எண்: இந்திய தூதரகம் அறிவிப்பு

இர்மா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உதவி தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

மாலை மலர்

இர்மா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உதவி தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். புளோரிடாவை தொடர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் இர்மா புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட சுமார் 63 லட்சம் மக்களை வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இர்மா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் மையத்தை அமைத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரி நவ்டேஜ் சர்னா கூறுகையில், ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பான முறையில் செயல்படும் சிறப்பு தொலைபேசி இணைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புளோரிடாவில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் எந்நேரமும் தொடர்பில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இர்மா புயல் பாதிப்பு குறித்து அறிவதற்கு 202-258-8819 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.