வாஷிங்டன்:
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் தெலங்கானாவை சேர்ந்த அச்சுதா ரெட்டி (57) வசித்து வருகிறார். இவர், கடந்த 1986ம் ஆண்டு இந்தியாவில் உள்ள உஸ்மானியா மருத்துவ பள்ளியில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்கா சென்று விட்சிதா பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை தனது கிளினிக் பின்புறம் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அச்சுதா இறந்து கிடந்தார். அங்கு வந்த போலீசார், ரத்தக் கறையுடன் காரில் அமர்ந்து இருந்த உமர் பரூக் தத் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இந்தியர் என்பதும், மருத்துவர் அச்சுதா ரெட்டியிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி என்பதும் தெரிய வந்தது.
கடந்த புதன்கிழமை அச்சுதா ரெட்டிக்கும், உமர் பரூக் தத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த மேலாளர், அச்சுதாவை தாக்க முயன்ற உமரை தடுத்துள்ளார். அங்கிருந்து தப்பி வெளியே சென்ற அச்சுதாவை விரட்டிச் சென்ற உமர், அவரை கத்தியால் பல இடங்களில் குத்தினார். அதில், படுகாயமடைந்த அச்சுதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இருவருக்கிடையேயான மோதல் குறித்தும், கொலைக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.