செய்திகள்

என்ஜினீயரிங் கல்விக் கடனை நிறுத்த இந்தியன் வங்கி முடிவு

வாராக்கடன் அதிகரித்துள்ளதால் என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #IndianBank

மாலை மலர்

சென்னை:

ஏழை மாணவர்கள் என்ஜீனியரிங் படிப்பதற்கு மத்திய அரசு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் படித்து ஒரு ஆண்டு வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும்.

வேலை கிடைத்ததும் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால் ஏராளமான மாணவர்கள் படிப்பு முடிந்தும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.

தேசிய வங்கியான இந்தியன் வங்கியில் ஏராளமான கல்விக்கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் வராக்கடனாக உள்ளது.

இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவம், உயர்படிப்புகள், மேல்நாட்டு படிப்புகளுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

வராக்கடனை வசூலிக்க அதற்காக அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலித்து வருகின்றனர். #IndianBank