காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு சமீப காலமாக இந்திய ராணுவமும் கடுமையான பதிலடி அளித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் தரப்பிலும் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடந்த தாக்குதல்கள் பற்றிய விவரத்தை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டு உள்ளன.
அதன்படி பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டில் 860 முறை எல்லை தாண்டிய தாக்குதலை அரங்கேற்றியதாகவும், இதில் 28 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் வழங்கிய பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 138 பேர் கொல்லப்பட்டதாகவும், 155 பேர் காயமடைந்ததாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் ஏற்படும் உயிர்ப்பலிகளை அந்த நாட்டு அரசு ஒப்புக்கொள்ளாமல், பொதுமக்கள் பலியானதாகவே காட்டிக்கொள்ளும். கடந்த மாதம் 25-ந்தேதி கூட இந்திய ராணுவ கமாண்டோக்கள் 5 பேர் எல்லை தாண்டி சென்று நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் பலியாகி இருந்தனர். இந்த உயிரிழப்பை முதலில் டுவிட்டரில் ஒப்புக்கொண்ட அந்த நாட்டு ராணுவம், பின்னர் அதை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #IndianArmy #PakistaniSoldiers #tamilnews