காத்மாண்டு:
இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே, அண்டை நாடான நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று நேபாளத்தின் ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் பேசினர்.
இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இந்திய ராணுவ தளபதி நரவனே சந்தித்து பேசினார். பலுவதாரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், இன்று மாலை நரவனே நாடு திரும்புகிறார்.