செய்திகள்

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி முதலில் பேட்டிங்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மாலை மலர்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜயும் களமிறங்கினர். தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து முரளி விஜயுடன் புஜாரா இணைந்துள்ளார்.

‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா இந்த டெஸ்டிலும் இலங்கையை புரட்டியெடுக்கும் வேட்கையுடன் இருக்கிறது. இந்த டெஸ்டில் டிராவோ அல்லது வெற்றி பெற்றாலோ தொடர் இந்தியாவின் வசமாகி விடும். அத்துடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்து விடலாம். இது தான் இந்தியாவின் பிரதான குறியாகும்.