செய்திகள்

20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த இந்தியா திட்டம்

பிபா நடத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த இந்தியா விண்ணப்பம் செய்ய திட்டமிட்டுள்ளது. #FIFA

மாலை மலர்

ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் தீவிர முயற்சி எடுத்து 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்தியது. இந்த தொடர் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி மீது இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மைதானம் மீது பிபா அமைப்பிற்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 2020-ல் நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை நடத்த விருப்பம் இருப்பதாக ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பிபாவிற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறுகையில் ‘‘2020 நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த ஏலத்தில் பங்கேற்பதற்கான அனைத்து வகை சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.