ஜோகன்னஸ்பர்க்:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 4.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் சோண்டோ, இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டி வில்லியர்ஸ், மோர்னே மோர்கல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா ஐந்து வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியுள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவர் தவானுடன் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். தவான், கோலி இருவரும் அரைசதம் கடந்தனர்.
இடையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 75 ரன்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தார், கோலி, தவான் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார். 100 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 13 சதங்கள் அடித்துள்ளார்.
பின்னர் ரகானே களமிறங்கினார். சதமடித்த தவான் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரகானேவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனியுடன், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. டோனி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் ரபாடா, நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மோர்னே மார்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணிக்கு 290 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #SAvsIND