இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாட்டு தொடரில் விளையாடுவதில்லை என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் போட்டி என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆனால், உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டும் அணிகளும் விளையாடுகின்றன.
இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான போட்டி குறித்து முடிவு எடுப்பது பிசிசிஐ கையில்தான் உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி கூறுகையில் ‘‘முதலாவதாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துணைக்கண்ட மக்களுக்காக விளையாட வேண்டும். இரண்டாவதாக, போட்டி நடைபெறுவதற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் பிசிசிஐ வசம் உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான நட்புணர்வு வெற்றியடைந்து, விரைவில் இருநாடுகளுக்கு இடையிலான சிறந்த கிரிக்கெட் நடைபெறும் என நம்புகிறேன்’’ என்றார்.