செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேர் கடத்தி கொலை - இந்தியா கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் சர்வதேச உணவு மற்றும் கேட்டரிங் சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாசிடோனியாவைச் சேர்ந்த ஒருவர் என 3 தொழிலாளர்களை இன்று திடீரென காணவில்லை. கம்பெனி நிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே அவர்கள் 3 பேரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அருகில் அவர்களின் அடையாள அட்டைகளும் கிடந்தன. அவற்றை உறுதிப்படுத்த கம்பெனிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். இறந்து போன இந்தியரின் இறுதி சடங்கு செய்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்துதரப்படும் என தெரிவித்துள்ளார். #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack