செய்திகள்

ஆப்கனில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கோழைத்தனமானது - இந்தியா கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #Nangarharsuicidebombing

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர் எனவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என காபுலில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Nangarharsuicidebombing

SCROLL FOR NEXT