புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 41 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் பலாகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. அந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய விமானப்படையின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியும் எழுந்துள்ளது.
இதையடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தங்களது பயிற்சி முகாமின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மாற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அடர்ந்த மலை காட்டுக்குள் புதிய பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளின் இந்த இடமாற்றத்தை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் புதிய பயிற்சி முகாம் பற்றி கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.