சென்னை:
ஊரடங்கு அமலில் இருப்பதாலும் ஓட்டல்களில் சென்று சாப்பிட அனுமதி இல்லாததாலும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட விரும்புபவர்கள் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் அதிகரித்து இருப்பதால் ஓட்டல்களில் விற்பனையும் அதிகரித்துள்ளது. தினமும் டெலிவரிகளும் அதிகரித்துள்ளது.
வழக்கமாக டெலிவரி கட்டணங்கள் ரூ.10 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஊரடங்கையொட்டி டெலிவரி கட்டணத்தை ரூ.20 முதல் ரூ.60 வரை வசூலிக்கிறார்கள்.
மடிப்பாக்கத்தில் இருந்து நங்கநல்லூரில் உணவு சப்ளை செய்ய ரூ.15 கட்டணம் வசூலிக்கிறார்கள். தொலைதூர கட்டணம் என்ற பெயரில் இந்த கட்டணத்தை வசூலிப்பதாகவும், ஊரடங்குக்கு முன்பு இந்த கட்டணத்தை கேட்டது இல்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஆனால் டெலிவரி ஊழியர்கள் தரப்பில் கூறும்போது அவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டதாக கூறுகிறார்கள். கடந்த ஆண்டு ஒரு ஆர்டருக்கு ரூ.35 சம்பளம் கொடுத்து வந்ததாகவும் பின்னர் அதை குறைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.