விழுப்புரம்:
ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையின் தலைமை அலுவலகம் கேரளாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்கு தமிழகத்தின் பல இடங்களிலும் கிளைகள் உள்ளன.
ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக தகவல் வந்தது. வரவு- செலவு கணக்குகளில் குளறுபடி இருப்பதாகவும், புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜாய் ஆலுக்காஸ் கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை வருமானவரிதுறை அதிகாரிகள் ஒரு காரில் வந்து இறங்கினார்.
பிறகு அவர்கள் நகை கடைக்குள் புகுந்து சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைக்குள் வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே விடவில்லை. இதேபோல் கடை உள்ளே இருந்தும் வெளியே யாரையும் அனுமதிக்க வில்லை.
முன்னதாக கடைக்குள் புகுந்த வருமான வரிதுறை அதிகாரிகள் கடையின் ஷட்டரை இழுத்து சாத்திக் கொண்டனர். கடையில் உள்ள நகைகளை மதிப்பிட்டு வருகிறார்கள்.
மேலும் ஜி.எஸ்.டி.அமல்படுத்துவதற்கு முன் எவ்வளவு நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.க்கு பின் எவ்வளவு நகை விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரிதுறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு வரும் ஜாய் ஆலுக்காஸ் நகை கடை கடந்த ஆண்டுதான் விழுப்புரத்தில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews