கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர். அந்த வகையில், பீகார் மாநிலத்திற்கு லட்சக்கணக்கான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அதற்கான மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
14 நாட்கள் ஆன நிலையில் 8 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்படட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 5 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இத்தகைய தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர்.
இந்த நிலையில், “ இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையற்ற கர்ப்பங்களை தடுப்பதற்காக தேவையான ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். அதற்கான உபகரணங்களையும் (ஆணுறை) இலவசமாக வழங்குகிறோம். இது முழுக்க முழுக்க குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ்தான் செய்யப்படுகிறது” என சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.