பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.
இதில் 176 ஓட்டு வாங்கி இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை.